Saturday, July 28, 2007

பை பை சின்சி.....




சின்சினாட்டி.. வாழ்வில் நான் பயணித்த நகரங்களில் என்றும் மறக்க இயலாத நகரமாகும்..ஆயிற்று இன்றோடு இங்கு வந்து ஒன்னரை வருடங்களுக்கு மேலாக. இப்போது எனது தாயகத்தினை பார்க்கும் நேரம்...






சென்று வருகிறேன் சின்சினாட்டி..






என் மூச்சுவிடுதலுக்கும்


மூச்சற்று இருத்தலுக்குமான


இந்த இடைவெளிகளில்


என் இருத்தலை காட்டிக் கொள்ளும்


அடுத்த நிகழ்வுக்கான


இந்திய பயணம்


ஆரம்பிக்கிறது...






சின்சினாட்டி.,..


உன்னுடன் நான் இருந்த எல்லா பொழுதுகளையும்


என் நினைவறைகளில்


பத்திரப் படுத்தியுள்ளேன்..




இனி வரும் காலங்களில்


மயிலிறகாய் நீயும் உனது தழுவல்களும்....




சென்று வருகிறேன்...




Wednesday, July 25, 2007

சின்சினாட்டியில் என்ன நடந்தது?

சின்சினாட்டியில் நடந்தது என்ன அப்படினு இதற்கு முந்தைய பதிவில் கேட்டதற்கான விடை இதோ.. எல்லாரும் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்த பதில் இதோ... ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாதுதான் என்ன பண்றது..அப்படியே பழகியாச்சு...



நான் குப்பை கொட்டும் (அ) பொட்டி தட்டும் எனது தாய் அலுவலகம் இங்கு சின்சினாட்டியில் தனது வருடாந்திர விழா (சின்ஸேசன்-2007 )வினை கொண்டாட பல ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாட முடிவு எடுத்து இருந்தது. அதுக்குனு ஒரு குழுவ போட்டு நீ பாட்டு பாடுவியா. நீ டான்ஸ் ஆடுவியா. நீ மீயுசிக் பண்ணுவியா னு கிளையண்ட் ஆப்பிஸில் வேலை பார்த்துகிட்டு இருக்கும் போது(யாரு அது... தமிழ் மணம்,வலைப் பக்கம் படிக்கிறதா அப்படினு கேட்கிறது. நான் என்ன பொற்கொடியா.பாயிண்டர்ஸ் படிக்கிறேனு சொல்லிட்டு தேடித்தேடி பிளாக் படிக்க..)வெறும் மெயிலா அனுபிச்சாய்ங்க.. நாமளும் எத்தன நாள்தான் பொறுத்துப் பார்க்கிறது. (விதி வலியது சொன்னா யார் நம்புறா?). ம்ம்..ஐ யாம் ரெடி ஃபார் டான்ஸ் னு சொல்லிட்டேன்... சொன்ன உடனெ ஆகா வந்துட்டாண்டா ஒரு நல்ல டான்சர் அப்படினு நினைச்சுகிட்டு உடனே கூட்டத்த கூட்டிட்டாங்க.. அங்க போனத்தான் தெரிஞ்சது இருக்கிறதே ஒருவாரம்தான் அதுல நீ பிராக்டீஸ் பண்ணி ஆடனும் அதுவும் குழுவாய்..இதுல என்ன பாட்டுக்கு ஆடலாம் னு கேட்டா ஹே மெரி தில்...னு ஒருபாட்டு,,தஸ் பகானெ கர் கே மே தில் தில்ல்...அப்படினு இன்னும் ரெண்டு ஹிருத்திக் பாட்ட எடுத்து வைச்சுகிட்டு ஒரு குருப் உக்காந்து இருக்காங்க. டேய் என்னடா விளையாடுறீங்களா, இது எல்லாம் நியாயமா?ஹிருத்திக் பாட்டுக்கு ஆடுர உடம்பாட என்னோடது .. எதோ. கத்தீரிக்கா குண்டு கத்தீரிக்கா அப்படினு ஒரு பாட்டோ, இல்ல டான்ஸ் ஆடத் தெரியா அபிஷேக் பச்சன் பாட்டோ போட்டீங்க அப்படினா நான் ஆடலாம்னு வந்தேன்..நீங்க என்னடான விவரம் புரியாமல்,அதுவும் ஒரே வாரத்தில் .. சாமி ஆள விடுங்கடானு ஸ்கேப் ஆனா , என் அலுவலக தோழி ரம்யா டேய் மணி நம்ப தமிழ் பாட்டு போடலாம்..என்ன சொல்ற அப்படினு கேட்க ஆஹா இது நல்லா இருக்கேனு சொல்லி பாட்டு தேட ஆரம்பிச்சோம்... கடைசியில் எல்லாரையும் அதிர வைக்கனும்..ஆட வைக்கனும் னு நினைச்சு எல்லாரையும் ஆட வைக்கிற " மன்மத ராசா மன்மத ராசா" வ தேர்ந்தெடுத்தோம்.. (அம்பி, இந்த பாட்டுல சாய "சிங்" வர்ரதா பார்த்துட்டு நீங்க ஆசையில இன்னும் அய்ய்ய்ய்ய்னு எல்லாம் சொல்லாதீங்க..அப்புறம் தங்க்ஸ் கிட்ட இருந்து எக்ஸ்ட்ரா ஒரு பூரிக்கட்டை த்ரோ கிடைக்க போகுது).

ஒகேனு நான், ரம்யாகோபால், விஜய் பரமார் மற்றும் சிமந்தனி வான்கடே னு நாலு பேர் பிராக்டிஸ் பண்ணினொம்.ஆனா நம்ப மத்த குரூப்ல இருந்து கொஞ்சம் வித்தியாசமா எதாவது பண்ணலாம் அப்படினு சொல்லி பாட்டு முடியறப்ப நம்ப தலையோட வசனத்த சொல்லாம்னு நானூம் விஜய்யும் முடிவு பண்ணினோம்.. அவனுக்கு தமிழே தெரியாட்டினாலும் சிவாஜி படத்த எனக்கு முன்னாடி முதல் ஷோ பார்த்திட்டு வந்தவன். நல்ல கிடாரிஸ்ட்.. (வெள்ளை பூக்கள் பாட்ட அருமையா பிளே பண்ணினான். எனக்காக தனியா அவ்ன் வீட்ல.. ) சோ அவனுக்கு தமிழ் உச்சரிக்க சொல்லிகொடுத்துட்டு டான்ஸ் கத்துகிட்டோம்.. இனிமையான அனுபவம்...

அமெரிக்காவில் , அதுவும் கிட்டத்தட்ட 100 நபர்களில் ஒரு பத்து,பதினைந்து நபர்களைத் தவிர தமிழ் தெரியாத இடத்தில் ,அதற்கு முன்னமே பல்வேறு நிகழ்வுகளை பார்த்துட்டு உணவுக்காக காத்திருந்த வேளையில் மன்மத ராசா ... மன்மத ராசா அரங்கேறியது... நிஜமாகவே சொல்லுகிறேன். இசைக்கு மொழி தேவையில்லை... கேட்கும் திறனும், ரசிக்கும் திறனும் இருந்தால் போதுமானது.மொழிகள் பேச்சு இழந்து போயின..ஆம் எல்லாராலும் திரும்பவும் ஒன்ஸ் மோர் கேட்கும் அளவிற்கு எல்லாரையும் கவர்ந்தது. திரும்பவும் ஆடினோம். ஆட்டுவித்தோம் உடன் இருந்த பார்வையாளர்களையும் சேர்த்து.

ஆம். இசை வரைகளற்றது.
இதுதான்பா சின்சினாட்டியில் நடந்தது..அப்பாடி ஒருவழியா முடிச்சாச்சு... ச்சோடா பிளிஸ்..


இன்னும் சில தகவல்கள்:

1. ஒருவேளை நாங்கள் வேறு வைகையான பாட்டினை( தமிழ் டிஸ்கோ, பரத நாட்டியம் ,,)தேர்ந்து எடுத்து இருந்தோம் என்றால் இந்த வகையான வரவேற்பினை பெற்று இருந்து இருக்க மாட்டோம். கிராமிய மணம் தனி மனம்தான்.
2. பார்க்க எளிமையாக இருந்தாலும் ஒவ்வோரு வார்த்தைகளுக்கும் நடன அமைப்பு இருந்த பாடல்.தனுஸ்,சாயசிங் உண்மையிலேய சாவலை சந்த்திது சிறப்பாக செய்த நடனம் இது.

3. இன்னும் கொஞ்சம் நாட்கள் இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக நான் நடனம் ஆடி இருப்பேன்.. ஆம். இன்னும் கொஞ்சம் திருத்திய முகபாவணைகளுடன்.
4. இந்த பாட்டினை தேர்தெடுத்த ரம்யா, ரம்யாவின் கணவர் கோபால் பட், மற்றும் என்னுடன் நடனம் ஆடிய விஜய் பரமார், சிமந்தனி வான்கடே(தமிழ் தெரியாமல் ) ஆகிய நண்பர்களுக்கு நன்றி. அதிலும் விஜயின் பணி சிறப்பானது.

ரொம்ப பெரிய பதிவா போயிடுச்சே.. ஆமாம் ஆமாம் சுயவிளம்பரம் என்றால்..அப்படித்தான்.(பிழைகளுக்கு வருந்துகிறேன்.அவசர கதியில் இட்டது)
போட்டாக்களை இங்கே பார்க்கலாம்(போட்டா எண் 95லிருந்து நம்பது தான்)



சாம்பிளுக்கு சில












(விஜய், சிமந்தனி, ரம்யா, நான்)





Monday, July 23, 2007

சின்சினாட்டியில் வலைப் பதிவர்கள் சந்திப்பு

என் இனிய பி.மு கழக மக்களே,
இந்த பிரியத்திற்குரிய பிரகாஷ் உங்களுக்காக நமது கழகத்தின் காலத்தில் அழியா நிழற் படங்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குவதில் பெருமை அடைகிறேன்..







சந்திப்பு ஏற்பாடு செய்த "கிளிவ்லேண்ட் ஹீரோ,வலைஉலகத்தின் காமடி புயல்,மதுரை மாப்பிள்ளே, ருண்..





சந்திப்பை சிறப்பாக்கிய பி.மு.க நிறுவனர் ,
கொலம்பஸ் கதாநாயகன், கனவுலக கார்த்தி








அரங்கம் தேவையில்லை ,வாயிலே போதும் என்று கூட்டத்தை தொடங்க உத்தேசித்த கட்சிக்குழு!!!! (கார்த்தி,அருண்,நான்)



கரைவேட்டி இல்லை, காலில் விழும் கலாச்சாரம் இல்லை... கொள்கையே முக்கியம்...
சந்திப்புக்கு பின் உறவினை மேம்படுத்த நடந்த சமபோஜன பந்தி... !!!


இது முற்றிலும் வித்தியாசமான வலைபதிவர்கள் சந்திப்பு. என்ன நடந்தது,என்ன பேசினோம் என்பதை நான் சொல்லுவதனை விட உடன் பங்குகொண்ட நமது கழக தலைகள் சொன்னால்தான் அதில் மிகுந்த சுவராசியம் இருக்கும் என்பதால் அதனை அவர்களிடம் விட்டு விடுகிறேன்...
குறிப்பு: இதுக்கு முன்னாடி போடுவதாய் இருந்த சின்சினாட்டியில் நடந்தது என்ன? என்ற பதிவு அடுத்த பதிவாய்....

Thursday, July 19, 2007

சும்மா அதிருதில்ல......


வணக்கம் நண்பர்களே,...


மிக நீண்ட நாள் கழித்து வலைப்பக்கம் வந்துள்ளேன்... நீங்கள் அனைவரும் நலமா? புதுமாப்பிள்ளை கூட வலைப்பக்கம் வந்து பதிவெழுதிட்டார். பல ஆணிகள் இருந்தும் தலைவி விடாது எழுதுகிறார் , என்னை எட்டு கூட போட சொல்லி இருக்கிறார்.(எழுதுகிறேன் தலைவி..)


பாயிண்டர்ஸ் கொடி எத்தன படத்த பார்த்து லிஸ்ட் எழுதி இருக்காங்களோ? அருண் உன் பிறந்த நாளை G3, சிறப்பா பதிவெழுதி சிறப்பித்து இருந்தாங்க. நாந்தான் அத லேட்டா படிச்சேன் :(.


கார்த்தி வழக்கம்போல் கவிதை எழுதியிருக்கியா? கதை,சினிமா எல்லாம் என்ன ஆச்சுனு வந்து பார்க்கனும்...


து.தலைவி வேதா, நீங்க வந்து கேட்டதற்கு கூட என்னால பதில் சொல்ல முடியல. கவிதை போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்..


அப்புறம் பிரியா, என்ன ஆச்சு அமெரிக்க ரேசன் கார்டு விடயம்????.
கல்யாண வேலைகள் எல்லாம் எப்படி போகுது?



டிரிம்ஸ் கண்களை மூடி எத்தனை கவித எழுதி இருக்காரோ? . கே.கே பிஸியா இருப்பார்னு நினைக்கிறேன்.


நம்ம நாட்டாமை ,நயந்தாரா மெலிந்த வருத்ததில பதிவே எழுதாமல் இருக்கிறார். என்ன மாதிரியே.....ம்ம்ம்ம்



சண்டைக் கோழி அக்கா எப்படி இருக்கீங்க? T.R.C சார் எப்படி இருக்கீங்க? அப்புறம் நாம எழுதித்தான் சொல்லனுமா ..நம்ப உறவுக்கார வலை மக்கள் எல்லாம் எழுதிய வலைப் பக்கங்களில் இந்த சின்ன பையன் இனி சூறாவளி பயணம் மேற்கொள்ளுவான்..... காத்திருங்கள்..



அப்புறம் இவ்வளவு நாள் நான் என்ன பண்ணி கிட்டு இருந்த அப்படினு நீங்க எல்லாம் கேட்கிறது எனக்கும் கேட்குது... ஏன் எழுதல அப்படிங்கிறதுக்கு விளக்கங்களை இனிவரும் பதிவுகளில் சொல்லுகிறேன்...



அப்புறம் இந்த தலைப்புக்கும் நீ எழுதறதுக்கும் என்ன சம்பந்தம் அப்படினு கேட்கறீங்களா...


நிறைய காரணங்கள்..


1. தலைவர் படத்த அமெரிக்காவில் தமிழ் நாட்டில எப்படி பார்த்தேனோ அதே மாதிரி அதே சவுண்டு ,அதே கூட்டம், அதே ஆட்டம் பாட்டத்தோட பார்த்தேன்...



2. இந்த வார்த்தைய சத்த்த்தமா இப்படி சொன்னா அதுவும் சின்சினாட்டில சொன்ன என்ன நடந்து இருந்து இருக்கும்?




நாளைக்கு சொல்லுகிறேன்.. என்ன நடந்தது என்று...









































Thursday, May 17, 2007

எனக்கு இப்பொழுதுதான் தெரியும்


"பாடாமல் இருக்க மாட்டாமை, பாரதியாருக்குப் பிறவிச்சொத்து. பாரதியாரின் இருதயம் பரிசுத்தமானது. அதில் ஒரு எண்ணம் உதிக்குமானால், அக்கணமே அவ்வெண்ணம் பாடல்களாய்க் குதிக்கும்"

சி. கணபதிப்பிள்ளை,யாழ்பாணம்


பாரதி பற்றிய ஒரு புத்தக உரையில் இவ்வாறே எழுதி இருக்கிறார்.அது எத்துனை உண்மையென்பது அவரது கவிதையின் வாசிப்பினில் புரியவரும். பாரதியின் பல்வேறு பாடல்களை வாசித்து கேட்டு இருந்தாலும் அவரது இந்த பாடலை பற்றிய சிறப்பு எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது.



மதுரையிலிருந்து வெளிவந்த விவேகபானு என்னும் இதழில் 1904 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் வெளி வந்த இந்த பாடலே மகாகவியின் அச்சேறிய முதற்கவிதை.


தனிமை இரக்கம்


குயிலனாய் நின்னொடு குலவியின் கலவி

பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்து பின்

இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்

குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்

மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்

பாவியென் நெஞ்சம் பகீரெனில் அரிதோ?

கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா

மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்

முடம்படு தினங்காள்! முன்னர் யான் அவளுடன்

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்

வளியெனப் பறந்த நீர் மற்றியான் எனாது

கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்

செயலையென் இயம்புவல் சிவனே!

மயிலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?



டிஸ்கி1:


இது பாரதி பற்றிய எனது தேடலின் பகுதி.எனக்கு தெரியாததினை அறியும் பகுதி என்பதால் இதில் ஏதேனும் தவறு இருப்பின் என் தவறினை சரிசெய்யவும்.


டிஸ்கி2:

இன்று திருமண நாள் கொண்டாடும் தலைவி கீதாமேடம் அவர்களுக்கு திருமணநாள் வாழ்த்து பரிசாய் இந்த பதிவு.ஆம் அவர்களுக்கு திருமண நாள் மே-17 (வருசம் எல்லாம் கேட்க கூடாதுனு சொல்லிட்டாங்க)என்று எனக்கு இன்றுதான் தெரியும்.அதற்கும் சேர்த்துதான் இந்த தலைப்பு.
-----

Sunday, April 29, 2007

அசுரனும் அழகுதான்

அழகுகளை பார்த்து, ரசித்து,உள்வாங்கி,அனுபவித்து அதனை அழகாய் எழுதியும் காண்பித்த பிரியா அழகாக இரண்டு நபர்களை (பொற்கொடியையும்,
சத்யபிரியனையும்) எழுத சொல்லிட்டு கடைசியில் இந்த அசுரனையும் அழக பத்தி சொல்லுடா அப்படினு சொல்லிட்டாங்க.அதான் என் மேல ஒரு அதீத நம்பிக்கையில் அசுரனும் அழகுதான் தலைப்பு வைச்சுட்டு நானும் அழகுனு(நீயே சொல்லிகிட்டாத்தான் உண்டுனு நீங்க சொல்றது எல்லாம் கேட்குது கேட்குது) சொல்லி இந்த உரையினை ஆரம்பிக்கிறேன்(இந்த கார்த்தி நம்பள அமைச்சரா அறிவித்ததில் இருந்து இப்படியே ஆயிடுச்சி. ஸ்ஸ்ஸ்ச்ச்ப்பா சோடா பிளீஸ்)

இந்த உலகத்தில் எல்லாமே அழகுதான்.உலகின் எல்லா பகுதிகளிலும்,எங்கேனும், எதோ ஒன்றாய் அழகு ஒளிந்தே உள்ளது. அது அஃறினையோ அல்லது உயர்தினையோ, இயற்கையோ அல்லது செயற்கையோ இல்லை வேறேதேனும் நிகழ்வுகளாகவோ இந்த பிரபஞ்சம் அழகாகத்தான் விரிகிறது.ஆனால் அதனை அனுபவிப்பதும்,அதன் அழகை உணர்வதும் ஒரு வகை கலை.அந்த உணர்வு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.ஆம், அதனால்தான் அசுரனும் என் கண்ணிற்கு அழகாய் தெரிகிறான்.

என் வீட்டு தொட்டிச்செடியினை
கடந்து சென்றபோது
எதிர் வீட்டுக்காரனின்
குரல் சொல்லியது
செடியில் பூத்த மொட்டுகள் அழகாம்..
செடியில் பூ இருந்ததா?
திரும்பி பார்க்க நேரமில்லாமல் யோசனையுடன்

சன நெரிசலில் கரைந்து போகிறேன்...

இப்படி அழகை தவற விடுபவர்களின் கண்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களை என்ன செய்வது?.சரி விசயத்துக்கு வருவோம். ஆறு அழகினை பற்றிச் சொல்ல வேண்டுமாம். எனக்கு முன்னே வலைப்பக்கத்தில் அனைவரும் எல்லா அழகினையும் சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்வது? அவர்கள் சொன்ன அழகினில் சில நானும் அனுபவித்ததுண்டு.இன்னும் சில இனிமேல் அனுபவிக்கும் போது அழகாய் தெரியும்.அவர்கள் விட்டுவிட்ட நான் பார்த்திட்ட,அனுபவித்த அழகினை இங்கு தொட நினைக்கின்றேன்.

என் புலன்கள் உணர்ந்த பல அழகில் சில (ஆறு)


1. "ழ":

தமிழில் எனக்கு அழகாய் தெரிகிற எழுத்து. பார்க்க மட்டும் அல்ல சரியாய் பேசும்போதும்,
அதன் உச்சரிப்பை கேட்கும் போதும் "ழ" அழகுதான்."ழ" என்ற ஒற்றெழுத்துவை மட்டும் இந்த வகைக்குள் அடக்க விரும்பவில்லை. "ழ" வை நான் பேச்சுத்தமிழோடு இணைத்தே பார்க்கிறேன்.கரகர குரலில் அழுத்தம் திருத்தமாய் தமிழ் பேசுதல் அழகு. அது யாராக இருப்பினும்.(உ.ம்) கலைஞர்,வைகோ,பாரதிராஜா,வைரமுத்து,
பட்டிமன்ற பெண் பேச்சாளர் பாரதி(சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில் வரும் பெண் பேச்சாளர். பெயர் சரியா? ஒருவர் காந்திமதி.இவர் இன்னொருவர்) வின் பேச்சுகள் அழகு.
யாழ் தமிழும் ,பிழை இல்லா கேரள தமிழும் மிக அழகுதான்.

2.கிராமத்து திருவிழா:


சண்டை போட்டவன் சமாதானமாகிப் போவதும், சமாதானமாய் இருந்தவன் சண்டையிட்டுக் கொள்வதும், மாமன், மச்சான்,அத்தை,சித்தப்பு,பெரியப்பு, அண்ணன்,தங்ககைகள்,அக்கா,தம்பிகள்,முறைப் பெண் என உறவுகளே ஊராய் திரியும் கிராமத்தின் திருவிழா அழகு. அந்தத் திருவிழா நாட்களில் கவலை மறந்து,வேலை மறந்து களிப்பும் கொண்டாட்டமுமாய் இருக்கும் கிராமத்து திருவிழா அழகு.ஊர் முழுவதும் குழாய் மைக்குகள், தெருவெங்கும் தோரணங்கள், பெருசுகளின் அரட்டைகள், பறையாட்டம்,கரகாட்டம்,நாடகம்,கறிச்சோறு,மதுநெடி,மாமன்களின் கேலிப் பேச்சு, தாவனி கட்டிய முறைப் பெண்ணின் மஞ்சள் தண்ணி, என கிராமத்து திருவிழா அழகோ அழகு.

3.தீப ஒளி:

சூரிய ஒளி,நிலவின் ஒளி, மின்சார விளக்கின் ஒளி என எல்லா ஒளிகளும் வெளிச்சத்தினை கொடுத்தாலும்,பிரகாசத்தினை தந்தாலும் மிக அழகாய் தெரிவது தீப ஒளியே. என் தோழியின் மூலமாய் நான் உருவ வழிபாடுகளை விட்டு விலகி இருந்த காலங்களில் ஒளியின் மீது இன்னமும் காதல் பிறந்தது. சிலைகளற்ற இடத்தில் வெறும் விளக்கினை மற்றி ஏற்றி ,அதன் சுடர் பிரகாசம் மனதுக்குள் என்னவோ செய்யும் ஒன்று.கார்த்திகை மாதங்களில் வீட்டு வாசலில் இருபுறங்களிலும் விளக்கினை ஏற்றி வைக்கும்போது அது நின்று எரியும் அழகினை நானும் நின்று ரசித்திருக்கிறேன்.அந்த கார்த்திகை நாளன்று தெருவேங்கும் பார்க்கும் தீப ஒளி அழகு. மாதா கோயிலின் மெழுவர்த்தி உருகி கரைந்திடுகையில் அதன் அழகு இன்னமும் கூடும்.

4.போராளிகள்:


தனக்கு பின்னால் தன் சமூகம் நலம் பெற வேண்டும்,தான் அனுபவித்த நச்சுக் காற்று மறைந்து தன் சந்ததியினர் நல்ல காற்று சுவாசிக்க வேண்டும் என்பதற்காக போராடும் எல்லா போராளிகளும் அழகானவர்கள்.தனது உரிமையினை பெற ,நிலைநாட்ட ,தனது உயிரினை இழந்து,உடமை இழந்து,குடும்பம் இழந்து, இரத்தம் சிந்தும் எல்லா போராளிகளின் போர்க்குணமும் அழகானவை.

5.வெள்ளை வேட்டி/சட்டை/மீசை:

அது என்னமோ தமிழனுக்கு ஒரு கர்வத்தினையும்,அழகினையும் தருவதில் இவைகளே முதலிடம் என்று சின்ன வயதிலிருந்தே ஒரு அழமான நம்பிக்கை.எனக்கு வேட்டி கட்ட சரியாக தெரியாவிட்டாலும் ஒவ்வோரு பண்டிகையின் போதும் நானும் விடா முயற்சியாய் வேட்டி அணிந்துகொள்வேன்.எஜமான்,நாட்டாமை(சியாம் நீங்களும் இப்படித்தான் முறுக்கு மீசை வச்சு,வெள்ளை வேட்டி எல்லாம் கட்டி இருப்பீங்களா?),கிழக்கு சீமையிலே மாதிரியான படங்களை பலமுற நான் பார்த்ததுக்கு இந்த வேட்டி சட்டையும் மீசையும்தான் காரணம். அப்புறம் மீசை. என் அரும்பு மீசை வளரத்தொடங்கியதில் இருந்தே என்னில் அழகாய் நான் கானுவது என் மீசையினைத்தான். பாரதியின் மீசை, எனது அப்பாவின் மீசை என அழகாய் தெரியும் மீசைகள் ஏராளம்.அதே மாதிரி உல்லாசம் படத்தில் விக்ரமின் மீசைக்காகவே "வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா "பாடலை பலமுறை பார்த்துள்ளேன். காதல் மன்னன்,உயிரோடு உயிராக படக் காலத்தில் வரும் அஜித்தின் மீசை அழகானது.


6.

என் அன்றாட பொழுது:

அதிகாலை காபி,
அந்திமச் சூரியன்,
அம்மாவின் புண்ணகையினில் மறையும் அவள் கண்ணத்து கோடு,
சாய்வு நாற்காலியில் செய்திகளுடன் உறங்கும் அப்பா,
பழசாகிப் போன பைக்,
இரைச்சலாய் இயங்கும் நகரம்,
டிராஃபிக் சிக்னலில் காணும்
சேலை கட்டிய தேவதைகள்,
எதிர்பாரமல் சந்திக்கும் பள்ளிக் கால நண்பன்,
சினிமா சுவரொட்டியில் தெரியும் நயன்தாரா,
காதில் கரையும் இனியே மெல்லிசை,
உறங்குவதற்கு முன் ஒருமுறையேனும்
நினைத்துவிடும் முதற்காதல்
என இவற்றில் ஏதேனும் ஒன்று
கூடியோ அல்லது குறைந்தோ
அழகாய்த்தான் இருக்கிறது

என் அன்றாடப் பொழுது

சாலையோரக் குழந்தையின்
புண்ணகையினை சுமந்து கொண்டு....

பிரியா, எதோ எனக்கு தெரிந்த அளவிற்கு எனக்கு பட்ட ,அனுபவித்த, நம் நண்பர்கள் எழுதாத அழகினை எழுதியுள்ளேன். அதுவும் மிகவும் தாமதமாக.இதற்கு அப்பாலும் இதைப் பத்தி எழுத நம்ப நட்பில யாரும் இல்லையென்றே நினைக்கிறேன். அப்படியாரவது இருந்தீங்க அப்படினா நான் டேக் பண்ணினதா நினைச்சு எழுதிடுங்க.

'அழகான நிகழ்வுகள் எப்போது வேண்டுமானலும் எங்கே வேண்டுமானாலும் நிகழலாம்"னு நான் எங்கேயோ கேட்டது. அது அப்படியே எல்லாருக்கும் நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்...






Thursday, March 29, 2007

இங்கேயும் வியர்டு (படிக்க)கிடைக்கும்

புயலாய் பி.மு.க கட்சியில் நுழைந்த கோபி எனக்கு ஒரு வலை(வீட்டு)வேலை குடுத்தார். உன்கிட்ட இருக்கிற வியர்டான விசயம் என்னனு கொஞ்சம் தமிழ் கூறும் நல்உலகத்துக்கு எடுத்துசொல்லுப்பா அப்படினு. ஆனா நாம வழக்கம்போல ஆணிய பிடுங்கிட்டு(இல்ல அப்படி பிடுங்கின மாதிரி நடிச்சிட்டு) இருந்ததுல எழுதறததுக்கு கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு. தாமதத்திற்கு வருந்துகிறேன் கோபி.சரி விசயத்துக்கு வருவோம். வியர்டுனா என்ன அது நமக்கிட்ட இருக்குதானு தேடிப் பார்த்து சொல்லுவோம்னு பார்த்தா, நான எங்க வீட்டுல பிறந்ததே வியர்டுதான் அப்படிங்கிறத தவிர வேற ஒன்னும் தேறமாட்டேன் என்கிறது... ஆனாலும் விடுவோமா ... தெரியாதத தெரியும்னு சொல்லி வேலை பார்க்கிற நமக்கு இது என்ன புதுசா என்ன. தேடிக் கண்டு பிடித்து இதோ....


வியர்டு 1 : வாசித்தல்:

எவன்டா இவன் இதப் போய் வியர்டு சொல்ரானேனு நீங்க சொல்றது கேட்குது..ஆனா, வாசித்தல் அப்படினு நாம சொன்னது கதை புத்தகத்த எப்படி வாசிக்கிறது அப்படிங்கிறதுதான். சின்னபுள்ளையா இருக்கிறப்ப வீட்ல கதைபுத்தகம் படிக்க விடமாட்டங்க. ஆனா நமக்கு அத படிக்காம இருக்க முடியாது.. என்ன பன்றது எப்படியாவது படிச்சே ஆகனும் இல்லைனா சோறு தண்ணி இறங்காதே.நான் எங்க வீட்ல மத்தவங்க யாரும் பண்ணாத நான் செய்ய ஆரம்பித்தேன்.பாட புத்தகத்த எடுத்து வைச்சுகிட்டு அதுக்குள்ள மறைச்சு வைச்சு காமிக்ஸ புத்தகம் படிக்க ஆரம்பித்ததேன். இன்ன வரைக்கும் அவங்கனால அத கண்டு பிடிக்க முடியல. அப்படி தொடர்ந்த அந்த வாசிப்பு அப்புறம் அப்படியே மற்ற எல்லாவகையான கதைபுத்தகத்திலையும் கொண்டு போய் விட்டுடுச்சு.அதுல முக்கியமானது இந்த ஆனந்த விகடன் படிக்கிறது. ஆவி படிக்கிறதுல நான் ஒரு பைத்தியமாகவே மாறிப் போனேன். புத்தகம் வாங்கியதும் அதனை திறத்து, அந்த புத்தகத்தின் வாசத்தினை முகர்ந்த பிறகுதான் படிக்க ஆரம்பிப்பேன். படிக்கிறது எப்படி ,கடைசிப் பக்கத்தில் இருந்து முந்தைய பக்கத்திற்கு வருமாறுதான். அது அப்படியே இன்னமும் தொடர்ந்து இப்ப எல்லா புத்தகத்தையும் பின்னாடி இருந்துதான் படித்து வருகிறேன்.


வியர்டு 2:இருளும் தனிமையும்:

அது என்னமோ தெரியல ,எனக்கு இந்த இருள் ரொம்ப பிடிக்கும் . ஒரு வேளை கருமைதான் எனக்கு பிடித்த கலர் என்பதாலாவோ என்னவோ இருளில் தனியாய் இருக்க பிடிக்கும். மின்சாரம் போனதுனா ஊரே வருத்தபடுவாங்க..ஆனா நான் மட்டும் சந்தோச படுவேன். மெழுகுவர்த்தியோ, விளக்கோ எல்லாரும் தேடிகிட்டு இருக்கிறப்ப நான் மட்டும் தனியா என் அறையில் படுத்து கொண்டு சத்தமாய் பாட்டு பாடிக் கொண்டு இருப்பேன்.(குரல் நல்லா இருக்குமா அப்படினு எல்லாம் நீங்க சாதரணமாய் யோசிக்க கூடாது.ஏன்னா நான் தான் வியர்டாச்சே.)இப்பவெல்லாம் பாட்டு பாடுறத விட பாட்டு கேட்கத்தான் பிடிக்குது..இந்த மாதிரி சூழ்நிலைக்குனே என்கிட்ட ஒரு பாட்டு பட்டியலே இருக்கு.உ.ம் : காக்கை சிறகினிலே..., ஏழாவது மனிதன் படத்திலிருந்து மற்ற எல்லா பாடல்களும், பூவே செம்பூவே..., தேவதை இளம் தேவதை,பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய் ன்னு.....நீண்டு கொண்டே போகும் .எனவே தனியாய், இருளில் பாட்டு பாடிக்கொண்டே(பக்கத்துல இருக்கறவங்கள பத்தி கவலை படாம),அல்லது கேட்டுக்கொண்டே இருக்க பிடிக்கும். மொட்டை மாடில படுத்துகிட்டு வானத்த பார்த்துகிட்டு இருக்கிறப்ப அந்த இருள் அழகு.


வி.டு 3: மழையில் நனைதல்:

ச்சோ என்று பெய்யும் மழையானாலும் சரி, சிறு சாரலாய் இருந்தாலும் சரி மழையில நனைய சந்தோசம். எப்படா மழை வரும் அப்படினு காத்து கிட்டு இருப்பேன். மழை வந்தது அப்படினா விடு ஜீட்.. அப்படியே மழையில போய் நனைஞ்சுகிட்டு ஊரெல்லாம் சுத்தி, தொப்பல் தொப்பல வீட்டுக்கு வந்து நின்னு அம்மா கிட்ட திட்டு வாங்கினோம் அப்படினா அது வாழ்க்கை.இப்பத்தாண்ட நீ இயற்கையின் காதலன் அப்படினு எனக்கு நானே சொல்லிக்கிட்டு திரிவேன். நனைதல் கொஞ்சம் கொஞ்சமாய் வேறு படத் தொடங்கியது . முதலில் மழையில் நனைந்து நடக்க பிடித்தது.பிறகு நனைந்து கொண்டு அப்படியே வந்து அம்மா கிட்ட காபி கேட்டா அவங்க இல்லைனு சொன்னதுக்கு அப்புறம் திரும்பவும் பக்கத்தில இருக்கிற டீக் கடைக்கு போயி சுடச்சுட காபி குடிக்கிறது. மழையில நனைஞ்சிட்டு அப்படியே ஐஸ்கீரிம் பார்லர் போய் ஐஸ்கீரிம் சாப்பிடுறதுனு மாறிகிகிட்டே இருக்கு

வி.டு 4: குலைச்சு அடிக்கிறது.

சாப்பிடறதுல எனக்கு நிகர் நானே தான் . அதுவும் எங்க வீட்ல கொஞ்சம் மக்கள்தொகை அதிகம்(இத பத்தி ஒரு தனிப் பதிவு விரைவில்ல்ல்ல்).அதுனால முன்னே யாரு வராங்களோ அவங்க அதிர்ஷ்டசாலி .ஆனா என் அண்ணாவுக்கு மட்டும் அம்மா தனியா எடுத்துவைச்சுடுவாங்க.. நம்மள மட்டும் எனோ மதிக்க மாட்டாங்க..சரி சரி விசயத்துக்கு வரேன். நாம எப்பவுமே தனியா சாம்பார் ஊத்தி சாதம் சாப்பிட்டாலும் இந்த சாம்பரோட தயிர் சேர்த்து சாப்பிடுறது தனி ருசி.இட்லி அப்படினா தேங்காய் சட்னியும் தக்காளி குருமாவையும் ஒன்னா குலப்பி அடிக்கிறது, கறி குழம்போட ரசம் சேர்த்து சாப்பிடுவது, தேனீரோடா பருப்புவடை(இத எங்க ஊர்ல ஆமை வடைனு சொல்லுவாங்க. ஏன் இப்படி பேர் வந்துச்சுனு நிறைய நாள் யோசிச்சு யோசிச்சு .... என்ன நடந்தது ஒன்னும் நடக்கல இன்னும் யோசிக்கிறேன்) சாப்பிடுறது தேனீர் ஒரு வாய், வடை ஒரு வாய்னு இப்படி ஒன்னோட ஒன்னு இணைத்து சாப்பிடறது நம்மகிட்ட இருக்கிற இன்னொரு வியர்டு விசயம். ஆனா இது நம்ம வீட்ல மட்டுமே செயல் படும்கிறதுனால நடைமுறை சிக்கல் இருக்கு..


வி.டு 5: 5.1,5.2,5.3..,,,,???###

ஹி..ஹி .இன்னும் நிறைய விசயம் இருக்கு மக்கா. நீ பாட்டுக்கு 5 மட்டும் எழுதுனு சொன்னா நான் என்ன பன்றது. அதுனால இது கீழ்கண்டவாறு வகைபடுத்தப் பட்டுள்ளது

5.1 ரெளத்திரம்:
அதாங்க கோபம் .நமக்கு இது கொஞ்சம் அல்ல நிறையவே .இந்த முன் கோபம் ,பின் கோபம், நடு கோபம்னு எல்லா கோபமும் சரியான நேரத்தில வந்திடும். அம்மா கிட்ட இருந்து அடுத்த மனிதன் வரைக்கும் கோபம் கொந்தளிக்கிறது.என்னால கட்டுபடுத்த முடியாத விசயம் இது மட்டுமே. வங்கிக்கு சென்று வரிசையில் நின்று கொண்டு வரைவோலை வாங்கும்போது அந்த அலுவக நண்பர்(???) வீட்டுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ சம்பந்தமற்ற விசயங்களை பேசிக்கொண்டு இருக்கும் போது கோபம் பொத்துகொண்டு வருகிறது அவரின் மேல்.அலுவலகத்தில் குழுமனப்பான்மை இல்லாத சக ஊழியனிடம் கோபம்,எப்போதெல்லாம் இலங்கையில் ஒரு தமிழ் குழந்தை அனாதையாகிறதோ அப்போது எல்லாம் புத்தரின் மேல் கோபம்,மிகைபடுத்தப் பட்ட செய்திகளை தரும் நாளிதழ்களின் மீது , என எல்லாரிடமும் சீக்கிரம் வரும் கோபம் என்னை விட்டு மெதுவாகவே செல்லுகிறது. எப்ப மாறுமோ?

5.2 நேர்த்தி:
நானாய் எடுத்துகொண்ட வேலையோ அல்லது எனக்கு கொடுக்கப்பட்ட வேலையோ அது நேர்த்தியாய் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிக நேரம் உழைப்பது. இதுவே எனக்கு சங்கடமாய் அமைந்த நேரங்கள் பல. ஆனாலும் நேர்த்தியாய் சிறப்பாய் குடுப்பதில் மெனக்கெடுவேன்.

5.3 பாசம்:
நான் ஒவர் செண்டினு என் எல்லாம் தெரிந்த தோழி திட்டிகிட்டே இருப்பா.நான் அதிகமாய் பாசமாய் இருந்து அதே மாதிரி அனைவரும் இருக்க வேண்டும் என எண்ணி அறிவால் முடிவெடுக்க வேண்டிய விசயங்களை மணத்தால் முடிவெடுத்து வருத்தமே உற்றாலும் பாசம் மட்டும் குறைய மறுக்கிறது எல்லாரிடமும்.


5.4 கடைசி நிமிட வேலை:

முன்னமே திட்டமிட்டு வேலைகளை வரைமுறை படுத்தினாலும் என் சோம்பல் காரணமாய் நாளை செய்வோம் என்று எனது நிறைய வேலைகள் கடைசி நிமிடத்திலெயே முடிக்கப் படுகிறது. இது மட்டும் மாறிட்டா......



5.5.தனித்து இருத்தல்:
வெள்ளையாய் உலகம் இருப்பின்
அதனில் கரும் புள்ளியாய்
நான்.
சரியோ தவறோ
தனித்து இருக்கவே அசைபடுகிறென்
!!!@@@@@###.இப்படி எதாச்சும் கிறுக்கி மத்தவங்கள குழப்பறது....

இதுக்கு பேருதான் வியர்டானா நீங்க தான் சொல்லனும்.. கோபி வேலைய முடிச்சாச்சு. எதாச்சும் ஒரு செண்ட் பாட்டில பார்சல் செஞ்சுடு.. இப்பதைக்கு இது அவுட் ஆப் வலை உலகம் ஆயிடுச்சு. அப்படியே பார்த்தாலும நமக்கு தெரிஞ்ச மக்கள் எல்லாரும் அல்ரெடி எழுதியாச்சு.அருண் நீ மட்டும்தான் பாக்கினு நினைக்கிறேன்.எனவே உன்ன மட்டும் இப்ப கூப்பிடுறேன்.....